மட்டக்களப்பு -வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவத்தில் காயமடைந்த பொது சுகாதார பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் முகக்கவசம் அணிய தவறியதால் அதனை அணியுமாறு அறிவுறுத்திய போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் சுகாதார சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹானே சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



